கௌசல்யாவின் அரசியல் நீக்கம் !

பெண்கள் அரசியலில் ஈடுபடுவதிலுள்ள சவால்களை இது காட்டுகின்றது. கௌசல்யா ஏன் தொடர்ந்து அரசியலில் எம்பி அர்ச்சனாவுடன் பயணிக்க மாட்டார் என்பதற்கு அவர் கொடுக்கும் விளக்கம் நகைப்பிற்கிடமாகவுள்ளது.

எம்பி அர்ச்சுனாவின் வழக்கிற்கு உதவி சட்டத்தரணியாக வந்த கௌசல்யா நரேந்திரன் எம்பியின் பிரத்தியேக சட்டத்தரணியாக மாறியது தான் கௌசல்யாவின் வீழ்ச்சியின் ஆரம்பம். இந்த இடத்தில் கௌசல்யா மீது பரிதாபமே தோன்றுகின்றது.

சிறு வயதில் தந்தையை பிரிந்து தாயின் அரவணைப்பில் வளர்ந்த கௌசல்யா தன்னுடைய கல்வியில் சிறந்து விளங்கியிருக்கின்றார். படித்து முடித்து ஒரு வளர்ந்து வரும் சட்டத்தரணியாகவும் திறமையுடன் தொழில் செய்திருக்கின்றார்.

அப்படியிருக்க இன்னொருவர் அதாவது அர்ச்சுனா இராமநாதன் தனக்காக முடிவுகள் எடுக்க அனுமதியளிக்கும் வகையில் கௌசல்யா தனது தனித்துவத்தை இழந்து போனது எப்படி?

அதுதான் யாழ்ப்பாணத்து வெள்ளாளிய ஆண் மைய தமிழ்ச் சமுதாயம் கட்டியெழுப்பியுள்ள சமூகவாழ்க்கை. அந்த வாழ்க்கையில் ஒரு தமிழ்ப்பெண் எப்போதும் ஏதோவொரு ஆணின் நிழலில் தான் தன்னுடைய அடையாளத்தை கட்டியமைக்க வேண்டியுள்ளது.

அந்த ஆண் தந்தையாகவோ, தனயனாகவோ, கணவனாகவோ அல்லது மகனாகவோ தான் இருக்க முடியும். அப்போது தான் பெண் பாதுகாப்பாக கௌரவமாக வாழமுடியும் என தமிழ்ப் பெண்களுக்கு கற்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மனப்பாங்கின் வெளிப்பாடே ”முள் மேல் சேலை விழுந்தாலும், சேலை மேல் முள் விழுந்தாலும், சேலை தான் கிழியும்“ என்ற பெண்ணடிமைத் தனத்தை வலியுறுத்தும் கருத்தியல், பழமொழியாக கடத்தப்படுகிறது.

இந்த விடயத்தில் கௌசல்யாவை எடுத்துக் கொண்டால், கௌசல்யா அரசியலுக்கு வருவதையும் அரசியலை விட்டு விலகுவதையும் எம்பியும் வைத்தியருமான அர்ச்சனா இராமநாதன் முடிவு எடுத்துள்ளார்.

அதனை எம்பி இராமநாதனே தனது வாயால் ஒத்துக்கொள்கிறார். கௌசல்யா அரசியிலிருந்து விலகும் முடிவை தானே எடுத்துள்ளதாக கூறும் அவர் சட்டத்தரணி கௌசல்யா முகநூல் கூட அவரால் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

அதைவிட பெரிய வேடிக்கை கௌசல்யாவிற்கு ஏதும் தகவல் சொல்வதாக இருந்தால் தன்னிடம் அறிவிக்கும்படி கூறுகிறார்.

கௌசல்யாவின் காதலில் குறுக்கிட்டு குழப்பிய போதும் சரி, கௌசல்யாவை தானே திருமணம் செய்வேன் என முழங்கிய போதும் சரி, கௌசல்யாவின் சலத்தை கம்பவாரதி ஜெயராஜ்க்கு பூசக் கொடுப்பேன் என்று கூறும் போதும்சரி, பொது இடத்தில் ஒரு சட்டத்தரணியை ‘தங்கம்‘, ‘ தங்கம்’ என அழைத்து தரம்தாழ்த்திய போது வராத அக்கறை, கௌசல்யா மீது இப்போது ஏன் எம்பி அர்ச்சனாவுக்கு வந்துள்ளது.

எல்லை மீறி விட்டது. கௌசல்யாவின் எதிர்காலமும், கௌசல்யாவினது குடும்ப மரியாதையும் இப்போது ஏன் கண்ணுக்கு தெரிகிறது. தனித்துவமாக தன்னுடைய அடையாளத்தோடு வாழ வேண்டிய ஒரு பெண் சட்டத்தரணியின் எதிர்காலத்தை இருட்டாக்கியது எம்பி அர்ச்சுனா இராமநாதன் ஆகும்.

கௌசல்யா செய்ததும் தவறு. தொழில்முறை ரீதியான வைத்தியர் அர்ச்சுனா இராமநாதனுடைய தொடர்பை அதைத் தாண்டி அடுத்த கட்டத்திற்கு கொண்டு போனது கௌசல்யா கற்றுக் கொண்ட “சட்டத்தரணி தொழில் நெறிமுறைகளுக்கு“ முரணானது.

இந்த விடயம் தனிப்பட்ட வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் மற்றும் கௌசல்யா நரேந்திரன் என்ற இரு தனிநபர்கள் சம்பந்தப்பட்ட விடயமாக கடந்து செல்ல முடியாது.

மக்களுக்கு சேவை என பொது வெளியில் வந்த இரு நபர்கள் சிறந்த முன்மாதிரிகளாக இருக்க வேண்டும். சட்டத்தரணி கௌசல்யா நரேந்திரன் தன்னுடைய தொழிலிலும் முறையான நெறிமுறைகளை பின்பற்றவில்லை. அரசியலிலும் அதையே தான் செய்திருக்கிறார்.

கடந்த பாராளுமன்றத் தேர்தலில் அவரை நம்பி மக்கள் வாக்களித்துள்ளார்கள். மக்களுக்கு பொறுப்புக் கூற வேண்டிய இடத்தில் அவர் உள்ளார். கௌசல்யா தானாக முன்வந்து அரசியலை விட்டு விலகினாலும் சரி விலத்தப்பட்டாலும் சரி வாக்குப் போட்ட மக்களுக்கு பதில் சொல்ல வேண்டும்.

கௌசல்யா மாதிரியான பெண்களை ஈழத்தமிழ்ப் பெண்கள் முன்மாதிரியாக எடுத்துக் கொள்ளக் கூடாது. ஆண் மைய, பால்நிலைச் சமத்துவமற்ற மற்றும் வன்முறைகள் நிறைந்த சமூகத்தில் பெண்கள் அரசியலில் தனித்துவத்தோடு செயற்படுவது மிகச் சிரமம்.

ஆனால் கௌசல்யா நரேந்திரன், உமாசந்திரப் பிரகாஷ் , சுரேகா பரமநாதன் போன்ற பெண்கள், ஆண்மைய அரசியலின் பிரதிநிதிகளாக இருப்பதும் பெண் உரிமைகளுக்கு மிக ஆபத்தானது. கௌசல்யா தனக்காகவும் குரல் கொடுக்கவில்லை. பாதிக்கப்பட்ட பெண்களுக்காகவும் குரல் கொடுக்கவில்லை.

ஊழல் ஒழிப்பு அணி வன்னி என்ற போலி அடையாளத்துடன் இயங்கும் முகநூலில் பெண்களின் நிர்வாணப்படங்கள் மற்றும் அவதூறுகள் வலம் வந்த போதும் கௌசல்யா அந்த இழி செயலை செய்பவர்களுக்கு வாக்காளத்து வாங்கினார்.

இன்று திடீரென பொதுவெளியிலிருந்து ஓடி ஒளித்து விட்டார். இப்படியானவர்களிடம் அதிகாரம் போனால் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் நிறைந்த தமிழ்ச் சமூகத்தில் இது பெரிய பின்னடைவாக இருக்கும். உமாசந்திரப் பிரகாஷ் போன்ற பெண்கள் பாலியல் சுரண்டலில் ஈடுபடும் ஆண்களுக்கு அரசியலில் முகவரியை உருவாக்கிக்கி கொடுக்கிறார்கள்.

அதுமட்டுமல்ல காலம்காலமாக பேரினவாத அரசியலைச் செய்து, தமிழ்ப் பெண்களை பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கி கொலை செய்த ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் மகிந்த ராஜபக்சவின் கட்சி எனத் தேசியக் கட்சிகளுக்கு வாக்கு சேகரித்து கொடுக்கும் இவர்களையும் தமிழ்ப் பெண்கள் இனங்கண்டு கொள்ள வேண்டும்.

போரில் வன்முறைக்குள்ளான பெண்கள் மீது இவர்களுக்கு எந்த அக்கறையும் இருக்கப் போவதில்லை. மேட்டுக்குடிப் பெண்களான இவர்களுக்கு அரசியல் அதிகாரம் ஒரு சமூக அந்தஸ்து மட்டுமேயாகும். சுரேக்கா பரமநாதன் போன்ற பெண்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து மேல் நிலைக்கு வரும்போது அவர்கள் தம்மையும் மேட்டுக்குடியாக பாவனை செய்ய தொடங்கிவிடுகிறார்கள்.

தமிழரசுக் கட்சி முன்னாள் தவிசாளர் வீட்டில் தீக்குளித்து இறந்த விஜிதாவுக்கு குரல் கொடுத்த சுரேகா, எப்படி பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். எம். ஏ. சுமந்திரன் தமிழரசுக் கட்சியில் நீண்டகாலமாக செயல்பட்ட பெண்களுக்காக பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட இடம் கொடுக்கவில்லை.

அதேநேரம் சுரேகாவை எம். ஏ . சுமந்திரன் பின்கதவால் தமிழரசுக் கட்சிக்குள் கொண்டு வந்து, சுரேகாவின் வாய்க்கு பூட்டுப் போட்டார். விஜிதாவின் மரணத்திற்கு காரணமானவர் என்று சுரேகாவால் குற்றம்சாட்டப்பட்ட சுகிர்தனோடே இணக்கமாக ஒரே கட்சியில் அரசியலில் பயணிக்க நிர்ப்பந்திக்கப்பட்டார்.

தாம் கொண்ட கொள்கையில் நிலையில்லாத பெண்களால் சமூகத்தில் இருக்கின்ற ஏனைய பெண்களின் உரிமைகளுக்காக போராட முடியாது. பெண்கள் எத்தனை துறைகளில் சரி சமமாக ஆண்களுக்கு நிகராக முன்னேறினாலும், அரசியலில் மட்டும் அவர்களால் தனித்துவமாக செயற்பட முடியவில்லை.

அதற்கு பிரதான காரணம் அதிகார அரசியலில் பெண்கள் இடத்தைப் பிடித்தால் பெண்களுக்கெதிரான சட்டங்கள் தொடக்கம் சமூக கட்டமைப்பில் மாற்றம் ஏற்பட்டு விடும் என்ற அச்சமாகும். ஈழத்தமிழர்களின் அரசியல் கட்சிகள் அனைத்துமே ஆண்களின் தலைமைத்துவதிலேயே செயற்படுகின்றன.

அக்கட்சிகளில் பெண்கள் ஆண்களுக்கு விருப்பு வாக்குகளைச் சேர்த்துக் கொடுக்கும் கருவிகளே. பெண்களால் தலைமைதாங்கி நடத்தக் கூடிய அரசியல் கட்சிகள் தோன்றினால் அல்லது பெண்களே தமக்கான கட்சிகளை உருவாக்கிக் கொள்ளும் போது ஒருவேளை பெண்களை அரசியலில் கருவேப்பிலையாக பயன்படுத்தும் நிலைமை மாறலாம்.

அதற்கு அரசியலுக்கு வரும் பெண்கள் மீது நிகழ்த்தப்படும் கருத்தியல் ரீதியான வன்முறைகளை எதிர்த்து நிற்க கூடிய திராணி பெண்களுக்கு உருவாக வேண்டும். விளிம்பு நிலையில் உள்ள பெண்களும், ஒடுக்கப்படுகிற பெண்களும் மற்றும் வன்முறைகளிலிருந்து உடைத்துக் கொண்டு வருகிற பெண்களும் அரசியலுக்கு வரும் போது மேட்டுக்குடி அலங்கார பொம்மைகளாக இருந்து கொண்டு போலிப் பெண்ணியம் பேசும் பெண்களை அரசியலில் இருந்து நீக்கலாம்.

வலிகளைச் சுமப்பவர்களே அந்த வலிகளுக்கு தீர்வை காண முடியும். அந்தவகையில் கௌசல்யா நரேந்திரனின் அரசியல் நீக்கம் தமிழ்ப் பெண்களின் போலி அரசியல்ப் பிரவேசத்தைப் பற்றிய மறுபரிசீலனையை வேண்டி நிற்கின்றது.

Leave a Reply