இலங்கையின் நெல் உற்பத்தியை ஊக்குவிக்க 4.6 மில். அமெ. டொலர் உதவி

சிறிய அளவில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகள் பிரதானமாக தமது சுய பயன்பாட்டுக்காக விளைச்சலைப் பயன்படுத்துவதோடு, அவர்களே பாதிக்கப்படக்கூடிய சமூகமாகவும் உள்ளனர். இரு காலங்களில் தொடர்ச்சியாக ஏற்பட்ட உரத் தட்டுப்பாடு காரணமாக அறுவடை வீழ்ச்சியடைந்தமையால், உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்துக்கான தேவைப்பாடுகளை அடைந்து கொள்வதற்கு சில விவசாயிகள் எதிர் விளைவுடைய கையாளல் மூலோபாயங்களைக் (அடகு வைத்தல், கடனுக்கு வாங்குதல், சேமிப்பிலிருந்து மீளப் பணம் பெற வேண்டி ஏற்படுதல்) கடைப்பிடிக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆட்பட்டனர்.

இந்த முன்னெடுப்பின் மூலமாக, உலர் மற்றும் இடை வலயங்களில் அடையாளம் காணப்பட்டுள்ள மாவட்டங்களில் காணப்படக்கூடிய ஒரு ஏக்கர் வரையான நிலப்பகுதியில் பயிர்செய்யும் சுமார் 250,000 சிறிய அளவில் நெற்பயிர்ச் செய்கையை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு 50 கிலோ கிராம் யூரியா உரம் எதிர்வரவிருக்கும் சிறு போக மற்றும் பெரும் போக பயிர்ச் செய்கைக் காலத்துக்கென வழங்கப்படவுள்ளது. இவ் உர வகை இலவசமாக வழங்கப்படும் என்பதுடன், விவசாய அமைச்சு மற்றும் கமநல அபிவிருத்தித் திணைக்களத்தின் ஆதரவுடன் விநியோகிக்கப்படும். உற்பத்தியை அதிகப்படுத்துவதற்கு உரத்தின் வினைத்திறனுடைய பயன்பாடு குறித்து விழிப்புணர்வூட்டல்களையும் சிறு நெல் விவசாயிகளுக்கு இச்செயற்றிட்டம் வழங்கும்.

அந்நியச் செலாவணியில் நிலவும் தட்டுப்பாடு காரணமாக உரத்தைப் பெற்றுக்கொள்ள மேலதிக மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு ஜப்பானிய அரசாங்கம் தீர்மானித்துள்ளதை நாம் அறியத்தருவதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இவ் ஆதரவானது, சிறு விவசாயிகளுக்கான சிறந்த வாழ்வாதாரத்தையும், நாடு பூராகவும் உள்ள அனைத்துப் பிரஜைகளுக்குமான அத்தியாவசிய உணவுப் பொருட்களுக்கான நிலையான அணுகலை உறுதிப்படுத்தி, உணவு உற்பத்தியை நெருக்கடிக்கு முன்பிருந்த மட்டத்திற்கே மேம்படுத்தும் என நாம் எதிர்பார்க்கிறோம்.” என இலங்கைக்கான ஜப்பானியத் தூதுவர் மிசுகோஷி ஹிதேகி தெரிவித்தார்.

உணவு மற்றும் விவசாய அமைப்பு (FAO), அதன் பங்குதாரர்களுடன் இணைந்து> நகர்ப்புற அமைப்புகள் உள்ளடங்களாக, விவசாயத்தை ஊக்குவிப்பதுடன் மிகவும் பாதிப்புக்குள்ளான மாவட்டங்களில் பாதிக்கப்படக்கூடிய விவசாயிகள் மற்றும் மீனவர்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாப்பதற்கும், துரித உணவுப் பாதுகாப்புத் தேவைகளுக்குத் தீர்வு காண்பதற்கும் இலங்கையிலுள்ள உணவு மற்றும் விவசாய அமைப்பு முன்வந்துள்ளது.