இஸ்ரேல் பிரதமர் வீட்டின் மீது ட்ரோன் தாக்குதல்

பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் செயல்படும் ஹமாசுக்கும் – இஸ்ரேலுக்கும் இடையே கடந்த ஓராண்டுகளாக போர் நடந்து வருகிறது. இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு உத்தரவின்பேரில் அந்த நாட்டு படைகள் காசாவுக்குள் நுழைந்து தொடர்ந்து தாக்குதல் நடந்து வருகிறது. இந்த போர் ஓராண்டை கடந்தும் தொடர்ந்து வருகிறது.

ஹமாஸின் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மாயில் ஹனியே கடந்த ஜூன் மாதம் இஸ்ரேல் தீர்த்து கட்டியது. ஈரான் புதிய அதிபர் மசூத் பெசெஷ்கியன் பதவியேற்பு விழாவில் பங்கேற்க அந்த நாட்டின் தலைநகரான டெக்ரான் சென்ற நிலையில் அங்கு வைத்து இஸ்மாயில் ஹனியே தங்கியிருந்த வீட்டின் மீது வான்வெளி தாக்குதல் நடத்தி இஸ்ரேல் தீர்த்து கட்டியது.

மேலும் ஹமாஸ் படைகளின் முக்கிய தளபதிகளை இஸ்ரேல் கொன்று குவித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஈரான் தனது ஆதரவு அமைப்பான லெபனான் நாட்டில் செயல்படும் ஹிஸ்புல்லாக்களை வைத்து இஸ்ரேல் மீது தாக்குதலை தொடர்ந்தது. இஸ்ரேலும் – லெபனானும் எல்லையை பகிர்ந்து கொள்வதால் ஹிஸ்புல்லாக்கள் எளிதாக இஸ்ரேல் மீது வான்வெளி தாக்குதலை தொடங்கி நடத்தி வந்தன. இதையடுத்து ஹிஸ்புல்லாக்களுக்கும் இஸ்ரேல் பதிலடி கொடுத்தது. பேஜர் அட்டாக், வாக்கி டாக்கி அட்டாக் அட்டாக், வான்வெளி தாக்குதல் மூலம் ஹிஸ்புல்லாக்களை தீர்த்து கட்டியது இஸ்ரேல்.

மேலும் ஹிஸ்புல்லாவின் தலைவராக ஹசன் நஸ்ரல்லாவும் சில வாரங்களுக்கு முன்பு இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் கொல்லப்பட்டார். இது ஈரானை கொந்தளிக்க செய்துள்ளது. இதையடுத்து ஈரான் நேரடியாக இஸ்ரேல் மீது கடந்த 1ம் தேதி வான்வெளி தாக்குதல் நடத்தியது. 

இதற்கு இன்னும் இஸ்ரேல் பதிலடி கொடுக்கவில்லை. இதற்கிடையே தான் ஹமாஸ் படைத் தலைவர் யஹ்யா சின்வாரை டார்கெட் செய்து இஸ்ரேல் தீர்த்து கட்டி உள்ளது. நேற்று முன்தினம் அவர் தெற்கு காசாவில் பதுங்கி இருந்தபோது கொல்லப்பட்டுள்ளார். அவர் இருக்கும் கட்டடத்தை கண்டுபிடித்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தி யஹ்யா சின்வாரை கொன்றுள்ளது. இதுதொடர்பான வீடியோவும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில் தான் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை தீர்த்து கட்ட ஹமாஸ், லெபனானில் இயங்கி வரும் ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் திட்டமிட்டுள்ளது. இதற்கிடையே தான் தற்போது திடுக்கிட வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வீட்டை நோக்கி பறந்து வந்த ட்ரோன் வெடித்து சிதறியுள்ளது. 

நெதன்யாகுவுக்கு இஸ்ரேலின் தெற்கு ஹைஃபா பகுதியில் சிசேரியா என்ற இடத்தில் தனி சொகுசு பங்களா உள்ளது.

இந்த பங்களாவை நோக்கி லெபனானில் இருந்து ட்ரோன் பறந்து வந்துள்ளது. இந்த ட்ரோன் அவரது பங்களாவின் அருகே வெடித்து சிதறியுள்ளது. இதில் பங்களாவின் ஒரு பகுதி முழுவதுமாக சேதமடைந்துள்ளதாக இஸ்ரேல் மற்றும் சவூதி அரேபியாவின் மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

சவூதியில் வெளியாகும் ஏஐ- ஹதாயத் வெளியிட்டுள்ள செய்தியில், ‛‛ட்ரோன் அட்டாக்கில் நெதன்யாகுவின் வீட்டின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதமடைந்துள்ளது. ஆனாலும் அதனை இஸ்ரேல் அரசு இன்னும் உறுதி செய்யவில்லை. இந்த தாக்குதிலும் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. அதேபோல் ட்ரோன் தாக்குதல் சமயத்தில் நெதன்யாகு வீட்டில் இருந்தாரா? இல்லையா? என்பது சரியாக தெரியவில்லை” என கூறப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தற்போது இஸ்ரேலை அதிர வைத்துள்ளது. அதுமட்டுமின்றி இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவுக்கு மரண பயத்தைகாட்டி உள்ளது. நெதன்யாகுவிற்கு எதிராக ஹமாஸ், ஹிஸ்புல்லா மற்றும் ஈரான் ஒன்றிணைந்துள்ளது. இதனால் எப்போது வேண்டுமானாலும் அவரை டார்க்கெட் செய்து தாக்குதல் நடத்தலாம் என்பதால் நெதன்யாகுவிற்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. 

Leave a Reply