காசாவில் போர் நிறுத்தம்

இதையடுத்து ராஃபா எல்லைப் பகுதி திறக்கப்படும் என எகிப்து பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதனால் பொதுமக்கள் வெளியேறுவதற்கு வழி ஏற்பட்டுள்ளது.

போர் நிறுத்தம் பல மணி நேரம் நீடிக்கப்பட்டாலும் அது குறித்த தெளிவான நேரம் அறிவிக்கப்படவில்லை.

மூன்று நாடுகளும் போர் நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்ட நிலையில் ராஃபா எல்லை இன்று பிற்பகல் 2 மணி வரை திறந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

ராஃபா, எகிப்தின் சினாய் தீபகற்பத்துக்கும் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள காசாவிற்கும் இடையே உள்ள எல்லைப் பகுதியாகும்.

இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இல்லாத இந்த ஒரே பாதை வழியாகத்தான் மக்கள் வெளியேற வேண்டும்.

இந்த நிலையில் அத்தியாவசியப் பொருள்களுடன் ஏராளமான வண்டிகள் ராஃபா எல்லையில் காத்திருக்கின்றன என அல் – அரிஷில் உள்ள பாதுகாப்பு வட்டாரமும் அரசு சார்பற்ற அமைப்புகளும் தெரிவித்தன.

எகிப்து, தமது தரப்பில் உள்ள எல்லை திறந்தே இருக்கும் என்று அண்மையில் அறிவித்திருந்தது. ஆனால் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் தொடர்ந்து குண்டுகளை வீசிவருவதால் மக்கள் அவ்வழியாக வெளியேற முடியவில்லை.

இந்த நிலையில் தெற்கு காசா வட்டார போர் நிறுத்த ஒப்பந்தம் மக்கள் வெளியேற வழிவக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.