தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, செவ்வாய்க்கிழமை (25) மாலை தலைநகர் டெல்லிக்கு புறப்பட்டார். அவர் புதன்கிழமை (26) பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்தார்.
அப்போது தெலங்கானாவுக்கு வரவேண்டிய நிதி மற்றும் மாநிலம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் பேசினார்.
இச்சந்திப்பு குறித்து பேசிய ரேவந்த் ரெட்டி,
“மத்திய அரசின் மும்மொழி திட்டம் குறித்து தற்போது பரவலாக விவாதம் நடந்து வருகிறது. தெலங்கானாவில் வரும் 2025-2026ஆம் கல்வி ஆண்டு முதல் 1ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை தெலுங்கு மொழி கட்டாயப் பாடமாக்கப்படும்.
“இது, தெலங்கானாவில் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அமலில் இருந்தாலும், அதனை முந்தைய பிஆர்எஸ் அரசு முழுமையாக அமுல்படுத்தவில்லை. இந்த திட்டத்தை நாங்கள் முழுமையாக அமுல்படுத்துவோம்.
“சிபிஎஸ்இ, ஐசிஎஸ்இ போன்ற பிற கல்வி வாரியங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் தெலுங்கு மொழி கட்டாய பாடமாக்கப்படும். பிற மாநிலங்களில் இருந்து தெலங்கானா வந்து படிக்கும் மாணவர்கள் சுலபமாக தெலுங்கு மொழி கற்க ‘வெண்ணிலா’ எனும் புத்தகத்தை மாநில அரசு வெளியிடும்” என்றார்.