நீரில் மூழ்கியது சஹாரா பாலைவனம்

ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை ஓரிரு நாளில் பெய்தது தான் இந்த வெள்ளபெருக்கிற்கு காரணம் என்று மொராக்கோ நாட்டு வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

இந்த உலகத்திலேயே மிகப்பெரிய பாலைவனம் என்றால், அது சஹாரா பாலைவனம் தான். பூமியின் மிகப்பெரிய வெப்பப் பாலைவனமான இது ஆப்பிரிக்கக் கலாச்சாரம், வரலாறுகளை பிரதிபலிக்கிறது.

சஹாரா பாலைவனம் பூமியில் மிகவும் வெப்பமான இடங்களில் ஒன்றாகும். கோடைகாலத்தில் சராசரி வெப்பநிலை 100.4 °F (38 °C) – 114.8 °F (46 °C) வரை காணப்படும். 

சஹாராவின் வெப்பநிலை காரணமாக அங்கு ஓர் உயிரினம், வாழ்வது என்பது கடினமாகும். அதேநேரம் பகலில் வெப்பம் அதிகமாக இருந்தாலும், இரவில் வெப்பநிலை வேகமாகக் குறைந்து காணப்படும். சில நேரம் உறைபனிக்குக் கீழே காணப்படும். சஹாராவில் அரிதாகவே மழை பொழியும். சில பகுதிகளில் மழை பெய்ய வருடக்கணக்கில் காத்திருக்க வேண்டும்.

இந்நிலையில் சஹாரா பாலைவனத்தில் திடீர் மழையால் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை வெறும் இரண்டு நாட்களில் பெய்ததால் சஹாரா பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. 

இந்த திடீர் மழை மற்றும் வெள்ளம் காரணமாக சஹாரா பாலைவனத்தில் எப்போதுமே வறண்டே காணப்படும் இரிக்கி ஏரி, நீர் நிரம்பி காணப்படுகிறது. இந்த புகைப்படங்களை நாசா வெளியிட்டுள்ளது. 50 ஆண்டுகளில் முதன்முறையாக மொரோக்கோவில் (Morocco) உள்ள இந்த பாலைவனத்தில் வெள்ளம் ஏற்பட்டிருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

காற்றின் ஈரத்தன்மை அதிகரித்திருப்பதால் வரும் மாதங்களில் கூடுதல் மழை வரும் என்கிறார்கள். இப்படி ஒரு மழை பெய்து 30 – 50 ஆண்டுகாலம் ஆகிவிட்டது என்றும், மொராக்காவின் தலைநகர் ரபாட்டாவில் இருந்து 450 கிமீ தொலைவில் உள்ள டாகோயுனைட் கிராமத்தில் பெய்த கனமழையால் இந்த வெள்ளம் ஏற்பட்டதாகவும், வெப்ப மண்டல சூறாவளியால் இந்த மழைப் பொழிவு ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார்கள். 

Leave a Reply