பிரதமர் மார்க் ரூட் இராஜினாமா

வெளிநாடுகளில் இருந்து வந்து நெதர்லாந்தில் குடியேறியவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது தொடர்பான மசோதாவை நிறைவேற்ற ஆளும் கூட்டணி அரசு முயன்ற நிலையில், மசோதாவுக்கு கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் பிரதமர் மார்க் ரூட் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய மார்க் ரூட், “புலம்பெயர்ந்தோர் மசோதா தொடர்பாக கூட்டணி கட்சிகள் வேறுபட்ட கருத்தை கொண்டிருந்தன என்பதில் எந்த ரகசியமும் இல்லை. துரதிருஷ்டவசமாக அந்த வேறுபாடுகள் தீர்க்க முடியாதவையாக ஆகிவிட்டன என்ற முடிவுக்கு வர வேண்டியுள்ளது. இதனைத் தொடர்ந்து என் பதவியை நான் இராஜினாமா செய்கிறேன். அமைச்சரவை முழுவதும் ராஜினாமா செய்வதை எழுத்துப்பூர்வமாக அரசரிடம் ஒப்படைப்பேன்” என்றார்.

இதையடுத்து, 150 பாராளுமன்ற தொகுதிகளைக் கொண்ட நெதர்லாந்தில் விரைவில் தேர்தல் நடைபெறும் என ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.