மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும் பங்களாதேஷ்

பங்களாதேஷில் இட ஒதுக்கீட்டுக்கு எதிராக மாணவர்கள் தொடங்கிய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. போராட்டம் வன்முறையாக மாறியதில் 650 பேர் உயிரிழந்தனர், பலர் காயமடைந்தனர். தீவிர போராட்டத்தையடுத்து பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா தலைமையிலான அரசு கவிழ்ந்தது. இதையடுத்து அவர் இந்தியாவில் தஞ்சமடைந்துள்ளார்.

அங்கு ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து கடந்த மாதம் 17ஆம் திகதி பல்கலைகழகங்கள், கல்லூரிகள், பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில் அங்கு சகஜ நிலை திரும்பி வருவதையடுத்து ஒரு மாதத்திற்கு பிறகு, அந்த நாட்டில் உள்ள கல்வி நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. இடைக்கால அரசின் தலைவராக உள்ள முகமது யூனுசின் அறிவுரையின்படி கல்வி நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன.

ஞாயிற்றுக்கிழமை முதல் வியாழக்கிழமை வரை அங்கு பாடசாலை, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிலையங்கள் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.