ரஷ்யாவின் மற்றொரு பகுதியிலும் அவசரநிலை பிரகடனம்

உக்ரைன் – ரஷ்யா இடையிலான போர் சுமார் 3 ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி சிறப்பு இராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷ்யா தனது தாக்குதல்களை நடத்தியது.

ரஷ்யாவின் தொடர் தாக்குதல்களால் உக்ரைனில் உயிர் மற்றும் உடைமை இழப்புகள் தொடர்ந்து அதிகரித்தன. ஆரம்பத்தில் ரஷ்ய ஜனாதிபதி புட்டினின் படைகள் ஆக்ரோஷமாக இருந்தன. பின்னர் ஜெலன்ஸ்கியின் இராணுவமும் மேற்கத்திய ஆயுதங்களின் உதவியுடன் எதிர் தாக்குதல்களை நடத்தி ரஷ்யாவை அதிர வைத்தது.

இந்த சூழலில் கடந்த 6ஆம் திகதி ரஷ்யாவின் எல்லைப் பிராந்தியமான கூர்ஸக்குள் பீரங்கிகள் மற்றும் கவச வாகனங்களுடன் சுமார் 1,000 உக்ரைன் படையினர் சமீபத்தில் நுழைந்தனர். உக்ரைன் படையினர் அங்கு ஒரு வாரமாக தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதன் காரணமாக அப்பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், அந்த பிராந்தியத்தில் அவசர நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. உக்ரைன் தாக்குதலில் ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும், பொதுமக்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிகிறது.

மேலும் 5,000 சிறுவர்கள் பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். உக்ரைன் படையின் முன்னேற்றத்தை ரஷ்ய படையினரால் தடுக்க முடியாமல் போனது. இதனால் ரஷ்ய எல்லைக்குள் சுமார் 30 கி.மீ.க்கு மேல் ரஷ்யப் படையினர் முன்னேறினர். உக்ரைன் கட்டுப்பாட்டுக்குள் சுமார் 1,000 சதுர கி.மீ. ரஷ்ய நிலப்பகுதி வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கூர்ஸ்க் பிராந்தியத்துக்குள் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து முன்னேறிவரும் நிலையில், அண்டை பிராந்தியமான பெல்கொரோடிலும் உக்ரைன் ஊடுருவலைத் தடுப்பதற்காக அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.