சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர்

 

சாதிய அடக்குமுறைக்கு எதிராகப் போராடிய சமூகப் போராளி தோழர் தங்கவடிவேல் மாஸ்ரர் அவர்களின் நினைவு தொடர்பாகச் சகதோழர்கள் கம்பர்மலை பொன் கந்தையா சனசமூகநிலையத்தில் இன்று மாலை 3.30 மணிக்கு வெளியிடவிருந்த நூலின் வெளியீடு சாதிவெறி பிடித்த விசமிகளால் கொலை மிரட்டல் விடப்பட்டுத் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. அறுபதுகளில் இருந்து சாதிய எதிர்ப்புப் போராட்டங்களில் முனைப்போடு ஈடுபட்ட தோழரின் பணிகள் குறித்த நூலே இவ்வாறு தடுத்து நிறுத்தப்பட்டது. யாழ் பல்கலைக்கழக விஞ்ஞானபீடப் பீடாதிபதியான சாதித் தடிப்பு மிக்க பேராசிரியர் ஒருவரே இதற்குக் காரணம் என ஊர்த்தகவல்கள் கூறுகின்றன. தோழரின் குடும்பமும் இந்தத் தடிப்புப் பேராசிரியருக்கு விலைபோகியுள்ளன. தோழரின் லண்டன் வாசியான மருமகனாரும் பேராசிரியரும் ஒரே மேசைக் குடிகாரர் என்பதால் மருமகனார் வெளியீட்டுக்கு வழக்குத்தாக்கல் செய்வேன் என பேராசிரியரின் தடித்த ஆலோசனையுடன் ஊர்முழுக்கத் தொலைபேசியில் கூறியுள்ளார். வெளிநாட்டுப் பணமோகத்தில் திளைக்கும் தோழரின் குடும்பம் தோழர் ஊருக்கே சேவை செய்தார், எங்களுக்கு ஒன்றும் கிழிக்கவில்லை, அவருக்குப் புத்தகம் எதற்கு? என்று கொந்தளித்து எழுகின்றனர். தோழரின் மகன் புத்தகத்துக்கு வரைந்த ஓவியத்துக்கு காவாலியின் ஓவியத்தைப் போட்டதாக லண்டனில் இருக்கும் மருமகன் கடும் வெறியில் தூசணத்தால் தொலைபேசியில் கொட்டித் தீர்த்திருக்கிறார். கம்பர்மலையில் உள்ள சில சக்திகளும் இந்த வெளியீட்டைக் குழப்பிக் கலாட்டா பண்ண தடித்த பீடாதிபதிப் பேராசிரியரின் கபடத்தனத்துக்குத் துணைபோயுள்ளன. குடும்பத்தினரும் ஒரு கலாட்டாக் கும்பலை பணம் கொடுத்து வெளியீட்டைக் குழப்ப என்று இறக்கியுள்ளனர். நல்ல நோக்கத்திற்காக நூலை வெளியிட முயன்ற தோழர்களின் கை சாதிவெறி பேராசிரியராலும் அவருக்கு அடிவருடுவோராலும் கட்டிப்போடப்பட்டுள்ளன.(Arun Ambalavanar)

நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணியினர் அமோக வெற்றி

நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்குப் போட்டியிட்ட நாசர், பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் மற்றும் பொருளாளர் பதவிக்குப் போட்டியிட்ட கார்த்தி ஆகியோர் அமோக வெற்றி பெற்றுள்ளனர். தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலின் வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெற்றது. ஏராளமான நடிகர், நடிகைகள் ஆர்வத்துடன் வந்து தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய், விக்ரம் உள்பட முன்னணி நடிகர்களும், நாடக நடிகர்களும் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்தனர். இந்நிலையில் இன்று நடைபெற்ற தேர்தலில் 1,824 நேரடி வாக்குகளும், 783 தபால் மூல வாக்குகளும் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சங்க தேர்தல் வரலாற்றில் இந்த அளவுக்கு அதிகமான அளவில் வாக்குப்பதிவு நடந்தது இதுவே முதல்முறை என்று கூறப்படுகிறது.

உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது

தமிழ் அரசியல் கைதிகள் கடந்த 10ஆம் திகதி திங்கட்கிழமை முதல் நடத்திய உண்ணாவிரதப் போராட்டம் நவம்பர் மாதம் 7 ஆம் திகதிவரை தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன் வெலிக்கடை சிறைச்சாலைக்கு இன்று (17) சென்று கைதிகளுடன் உரையாடினார். அதன் பின்னரே தங்களின் உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக தமிழ்தேசியக் கூட்மைப்பின் உறுப்பினர் எம்.ஏ . சுமந்திரன் தெரிவித்தார். ஜனாதிபதியுடன் இடம்பெற்ற அலைபேசி உரையாடலின் போது தமிழ் கைதிகளின் விவகாரம் குறித்து ஜனாதிபதி தீர்மானமொன்றை எடுப்பதற்கு சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக எதிர்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் கைதிகளுக்கு எடுத்துரைத்தார் என்றும் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி தெரிவித்தார்.

LTTE இன் பெண்கள் பிரிவின் முன்னாள் தலைவி காலமானார்

தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் பிரிவின் அரசியல் பிரிவு முன்னாள் பொறுப்பாளர்  தமிழினி என்றழைக்கப்படும் சுப்ரமணியம் சிவகாமி காலமானார். மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர், இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளதாக, அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்

முதலாளிமார் சம்மேளனத்தினால் நாட் சம்பளமாக ரூபா. 1000/= பெறக்கூடிய ஒரு முறையை பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்டு அது தொழிற்சங்கங்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஊடகங்களில் செய்திகள் வந்திருந்தன. எனினும் முதலாளிமார் சம்மேளனம் அந்த முறையை பகிரங்கப்படுத்த முடியாது என குறிப்பிட்டிருந்தது. அந்த முறை தொடர்பாக தொழிற்சங்கங்கள் தங்களது உறுப்பினர்களுடன் பேசிவிட்டு முடிவு தெரிவிக்க உடன்பட்டதாக முதலாளிமார் சம்மேளனம் குறிப்பிட்டிருந்தது. தொழிற்சங்கங்களும் அதனை பகிரங்கப்படுத்தாத நிலையில் முதலாளிமார் சம்மேளனம் முன்வைத்த சம்பள முறை என்ன என்பது மூடு மந்திரமாகவே உள்ளது.

(“நியாயமான சம்பளத்திற்காகவும் நியாயமற்ற நிபந்தனைகளுக்கு எதிராகவும் தொழிலாளர்கள் அணித்திரண்டு போராட வேண்டும்” தொடர்ந்து வாசிக்க…)

வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சிறைக் கைதிகளுக்கு இவ்வருட இறுதிக்குள் அரசாங்க மட்டத்தில் நிச்சயம் சாதகமான தீர்மானம் பெற்றுத்தரப்படுமென்பதால் உண்ணாவிரத போராட்டத்தை கைவிடுமாறு நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக்கைதிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார். “போலியான வாக்குறுதிகளை வழங்கி சிறைக் கைதிகளை ஏமாற்ற நான் விரும்பவில்லை. இவ்வருடம் முடிவதற்கு இன்னும் இரண்டரை மாதங்களேயுள்ளன. சட்டமா அதிபர் திணைக்களத்துடன் இணைந்து கைதிகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களை தயார்செய்ய எனக்கு இக்காலப் பகுதியை அவகாசமாக தாருங்கள்” எனவும் அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ சிறைக் கைதிகளிடம் வேண்டுகோள் விடுத்தார்.

(“வருட இறுதிக்குள் சாதகமான தீர்வு: உண்ணாவிரதத்தை கைவிடுங்கள்” தொடர்ந்து வாசிக்க…)

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில்

 

டேவிட் ஐயாவின் இறுதி நிகழ்வு கிளிநொச்சியில் நடந்தது. மிகக்குறைந்தளவானவர்களே கலந்து கொண்டனர். ஊடகங்கள் எதுவும் அவரின் இறுதி நிகழ்வு பற்றிய செய்திகளையோ அவரைப்பற்றிய விவரங்களையோ வெளியிடவில்லை. அவர் ஒரு காலங்கடந்த மனிதராகவே ஊடகங்களால் கைவிடப்பட்டிருந்தார். குறைந்த பட்சம் இணையத்தளங்களையும் முகப்புத்தகத்தையும் பார்த்துக்கூட அவரைப்பற்றிய தகவல்களை அறியும் நிலையில் இலங்கைத்தமிழ் ஊடகங்கள் இருக்கவில்லை. அல்லது அவர் புளட்டுடன் அடையாளம் காணப்பட்டவர் என்பதால், தற்போது அவர் எந்தப் பட்டியலில் (துரோகியா தியாகியா ) உள்ளார் என்ற குழப்பத்தில் அவரைப்பற்றி எழுதவும் வெளிப்படுத்தவும் தயங்கியிருக்கலாம். இறுதி நிகழ்வில் பலர் உரையாற்றினார்கள். ஆனால் டேவிட் ஐயா எந்த இடம் பெயர்ந்து வந்த மலையக மக்களின் ஈடேற்றத்துக்காக முன்னின்று உழைத்தாரோ, யாருடைய வாழ்க்கை முன்னேற்றம் காண வேண்டும் என்று விளைந்தாரோ அவர்களில் இருந்து ஒருவர் கூட உரையாற்றவில்லை. அப்படி ஒருவருக்கான இடமும் கிடைக்கவில்லை. அவரைச் சிலர் தமக்கான நிகழ்கால – எதிர்கால அரசியலுக்குத் தத்தெடுக்க முனைந்ததுதான் ஆகப் பெரிய அவலமாக இருந்தது.

(Sivarasa Karunagaran)

புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு

தமிழீழ விடுதலைப் புலிகளின் கனேடிய அமைப்பை இயக்குவதற்காக டொரோன்டோவுக்குச் சென்ற, தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் எனக் கூறப்படும் மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரை நாடு கடத்துமாறு, கனேடிய பெடரல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கனேடிய குடிவரவு சட்டங்களின் அடிப்படையில் சுரேஷை நாட்டுக்குள் அனுமதிக்க முடியாது என அந்நாட்டு குடிவரவுத் திணைக்களம் அறிவித்துள்ளது.

(“புலி உறுப்பினரை நாடுகடத்த உத்தரவு” தொடர்ந்து வாசிக்க…)

வெலே சுதாவுக்கு மரண தண்டனை

கடந்த 2008ஆம் ஆண்டு கல்கிசை பகுதியில் 7.05 கிராம் ஹெரோய்னை தன்வசம் வைத்திருந்தார் என்று குற்றஞ்சாட்டப்பட்டுள்ள வெலே சுதா என்றழைக்கப்படும் கம்பளை விதானகே சமன் குமாரவை குற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி, அவருக்கு மரண தண்டனை விதித்து சற்று முன்னர் தீர்ப்பளித்துள்ளார்.

தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு

தமிழ் அரசியல் கைதிகள் ஆரம்பித்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இரண்டாவது நாளாக நேற்றுத் தொடர்ந்தது. உண்ணாவிரதமிருந்த நான்கு கைதிகளின் உடல்நிலை மோசமடைந்ததால் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகளின் கோரிக்கை ஜனாதிபதியின் செயலாளர், சட்டம் ஒழுங்கு அமைச்சுக்கு அனுப்பிவைக்கப் பட்டிருப்பதுடன், சட்டம் ஒழுங்கு அமைச்சர் இது தொடர்பில் ஜனாதிபதியுடன் கலந்துரையாடவிருப்பதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் ரோஹண புஷ்பகுமார தெரிவித்தார்.

(“தமிழ் கைதிகளின் உடல் நிலை பாதிப்பு” தொடர்ந்து வாசிக்க…)