21/4 தாக்குதலின் உண்மை நிலையை வெளிப்படுத்துவோம் – சஜித்


உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக முறையான விசாரணைகள் வெளிப்படைத்தன்மையோடு  இடம் பெற்றதா என்பது குறித்தே இந்த நாட்டில் உள்ள  கத்தோலிக்கர்களுக்கும்  ஒட்டுமொத்த நாட்டு  மக்களும் எதிர்பார்த்திருக்கின்றனர்.  இதன் உண்மைத்தன்மை  வெளிப்படுத்தப்பட்டதா என்பது குறித்தும் சிக்கல் காணப்படுகின்றன. எனவே  இது தொடர்பில் முறையான விசாரணைகளை மேற்கொண்டு, கா்தினல் உள்ளிட்ட கத்தோலிக்க பேரவைக்கு எங்கனமும் தெளிவுபடுத்துவோம் என்று  எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவ்வாறே, உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கான பின்னணி  மற்றும் அதன் உண்மைத்தன்மை  என்பனவற்றை எந்தவித பேதமும் இன்றி கண்டறிந்து,  அதனுடன் தொடர்புடைய  அனைவரையும் சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய  அதிகபட்ச தண்டனையை  பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும்  எதிர்க்கட்சித் தலைவர் இதன் போது வாக்குறுதியளித்தார். 

2024 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலுக்காக ஆசிகளை பெற்றுக் கொள்ளும் முகமாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கொழும்பு ஆயர் இல்லத்திற்கு ஞாயிற்றுக்கிழமை (18) விஜயம் செய்தார். 
இங்கு, பேரருட்திரு மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை, அருட்திரு மெக்ஸ்வெல் சில்வா, அருட்திரு ஜே.டி. அந்தனி ஜயகொடி, அருட்திரு அன்டன் ரஞ்சித், அருட்திரு சிறில் காமினி மற்றும் அருட்திரு இந்திக ஜோய் ஆகியோரைச் சந்தித்து எதிர்க்கட்சித் தலைவர் ஆசிகளைப் பெற்றுக் கொண்டார். இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.